சனி, 9 ஆகஸ்ட், 2014

மெய் தேடல்





காத்திருப்பில் நம்பிக்கை அற்றவன் நான்,
போகிற போக்கில் வாழ்க்கையை
அனுபவித்து தீர்த்துவிட வேண்டும்
என்பதே வாழ்வினொடு என் நிலைப்பாடு,
இதில் நீ மட்டுமே முரண்பாடாய்,
உனக்கான ஒவ்வொரு காத்திருப்பின் இறுதியிலும்
இன்னொரு காத்திருப்பிற்க்கான
கதவுகள் திறக்கப் படுகிறது.
எத்தனை முயன்றும் உன்னை
வாழ்வின் எந்த விடயத்தை போலவும்
விட்டு விலகி செல்ல முடியாமல் தவிக்கிறேன்.
என்றெனை ஆட்கொள்வாய் சகியே,
என்றென் காத்திருப்புகளுக்கு விடை கொடுப்பாய்.
வாழ்வில் வழிந்தோடும் அமிர்தம்தனை
நின் துணையின்றி ருசிப்பதேது.
இதோ மீண்டும் ஓர் இரவு கருத்தது.
அடுத்த விடியளிலேனும் நின் முகம்
காணமாட்டேனா என்ற தேடலுடன்.
எத்தனை முறை நான் பிறந்தேனோ –அதில்
எத்தனை முறைக் உனைக் காணாமல் கடந்தேனோ
அத்தனையும் புத்திக்கு அறியாமல்
சித்தனைப் போலவே தவம் கிடந்தது
பித்தனாய் அலைந்து திரிகின்றேன்
இத்தவனையேனும் எனை ஆட்கொண்டு
முக்தனாய் மாற்றித் தந்திடுவாய் என் சகியே.
ஆயிரம் பதினாயிரம் இரவுகள்
நீ இன்றி கடந்து சென்றாலும்
ஏதோ ஒரு விடியலில்
ஜோதியாய் என் எதிரே நீ அமர்ந்து
என் முன்வினை பாவமெல்லாம்
முழுவதுமாய் எரிந்து மடிந்து போக
இழுத்தென்னை அணைத்திடுவாய் என் சகியே.
மீண்டுமொரு ஜன்மம் நான் மீளா வண்ணம்
என்னை உன்னுள்ளே கலந்திடுவாய் என் சகியே.

:- கௌதமன் ராஜகோபால்

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

எண்ணம், செயல் மற்றும் அதன் விளைவு இதில் எது நமது?? பாகம் - 2



அனுபவம் அது கொடுக்கும் பாடம் ஒவ்வொன்றும் வாழ்க்கையின் தேடலுக்கான படிக்கல்கள். நோக்கம் எதுவாயினும் இறுதியில் நாம் அடைவது நமக்கானதை மட்டும் தான். இந்த நிமிடம் இந்த நிகழ்வு இந்த அனுபவம் தவிர்க்க இயலாதது. ஆம். நாம் ஆயிரம் கற்பனைகள் செய்யலாம். அதில் ஒன்று கூட நடவாமல் போகலாம். நாம் எதிர் பார்க்காத ஒன்று நடந்தேறலாம். அதற்க்கு காரணம். அதை சிலர் விதி என்பர். நான் அதைத்தான் வாழ்வென்பேன். 

வாழ்க்கை மிக மிக அழுத்தமான சூட்சும முடிச்சுகளைக் கொண்டது. அது தானை அவிழும், அதற்க்கான காரண காரியங்களை மட்டுமே நம்மைக் கொண்டு செய்விக்கும். புரிந்து கொள்வது அவ்வளவு எளிதானது அல்ல. சில நேரங்களில் நமக்கு சில எண்ணங்கள் தோன்றலாம். சட்டென உதித்த எண்ணத்தை நாம் உதாசீனம் செய்துவிட்டு வேறு பல காரியங்களை செய்ய திட்டமிடலாம். இறுதியில் நடப்பது ஆதியில் தோன்றியதாய் இருக்கும். நமக்கே தெரியாமல் நடந்தேறும் அது. காரணம் என்னவாயிருக்கும்? ஒரு விசயத்தை நாம் தொடங்க நினைக்கையில் சட்டென ஒரு எண்ணம் உதித்து மறைகையில் அது ஆதியாய் நிற்பவனின் வழிகாட்டல் என்றுணர்க. ஆம், இது எனக்கு என் குரு ஒருவர் உரைத்த உபதேசம். நாம் எப்பொழுதும் உள்ளும் புறமும் விழிப்புடன் இருப்பது அவசியம். காரணம் பல நேரங்களில் நாம் ஏதாவது செய்ய விளைகையில் அல்லது அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கையில் நம் மனதிடம் கவனம் வைப்பதில்லை. எனவே நமக்கான செய்தி எதுவாயினும் அது புற உலகத்திடம் இருந்து வருகிறது.

அது எப்படி புற உலகத்திடம் இருந்து வரும் என்ற கேள்வி என்னை எட்டுகிறது. நானும் என் குருவிடம் கேட்க்காமல் இல்லை. அவர் கூறிய விஷயம் ஆச்சர்யமானது. நாம் ஒரு விசயத்தை யோசித்துக் கொண்டிருக்கும்போதோ அல்லது பேசிக்கொண்டிருக்கும் போதோ நம்மை கடந்து செல்லும் யாரவது ஒருவர் அவருக்கே தெரியாமல் அவரது சம்பாசனைகளில்  சில வார்த்தைகளை சத்தமாய் உரைத்துவிட்டு செல்ல கூடும், அது நம்மை எட்டும் அளவுக்கு இருக்கும். அதிலிருந்து குறிப்புணர வாய்ப்புகள் அதிகம். இல்லையென்றால் யாரவது ஒருவர் சம்பந்தமே இல்லாமல் வந்து நம்மிடம் எதாவது பேசிவிட்டு செல்வர். நாம் அவரை பைத்தியம் என்று கூட நினைக்க வாய்ப்பிருக்கும். இது பலருக்கு நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் நாம் அவைகளின் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை. இப்படி புற உலகத்தில் வரும் சமிக்கைகைளின் மூலம் பல விஷயங்கள் உணர்த்தப்படுமாம். எனவே புலன்களை திறந்து வை என்பார் அவர். சுற்றி இயல்பாய் நடக்கும் விசயங்களை கவனிக்க தவறுதல் கூடாது.

அது போலத்தான் வெகு சில நேரங்களில் மனம் அமைதியாய் இருக்கும்போது யாரவது எதாவது கேட்கும்போதோ அல்லது நாம் செய்வதை பற்றி சிந்திக்கும் போதோ  சட்டென ஒரு எண்ணம் எழும். அவையும் அப்படித்தான். எனவே எப்பொழுதும் உள்ளும் புறமும் விழிப்புடன் இருப்பது அவசியம்.
அன்று தை பொங்கல் இரண்டாம் நாள், பௌர்ணமி. முந்தைய நாள் எனது மகர ஜோதி விரதம் பரிபூரண பூர்த்தி அடைந்ததும், அம்மையப்ப்னும், அய்யப்பனும் என்னை வாரி அனைத்த உணர்வையும் முந்தைய பதிவில் பகிர்ந்திருந்தேன். இன்று மறுநாள் பௌர்ணமி எனது மாத விரத நாள். காலை எழும்போதே எனது இரண்டு மாமாக்களும் என் படுக்கையின் அருகில் அமர்ந்து அன்றைய திட்டம் என்ன என்பது பற்றி பேசிக்கொண்டிருந்தனர். நான் கண் விழித்தவுடன் என்னை அவர்கள் இன்று எல்லோரும் எங்காவது சென்று வரலாம். இதுவரை போகாத புதிய இடமாய் இருக்கட்டும், கோவிலாய் இருந்தாலும் சரி என்றனர். சட்டென மனதில் தோன்றியது காங்கேயம் சிவன் மலை, அல்லது சென்னிமலை இரண்டுமே மகன் சுப்பிரமணியர் அழகனான முருகன் அருள் பொங்கும் மலைதான். நினைப்பதற்கு முன் இதழ்கள் உதிர்த்து முடித்திருந்தது. அரைத்தூக்கத்தில் இன்னும் சரியாக கண் கூட விழிக்காத நேரத்தில் எப்படி நான் இதை சொல்லி இருக்க முடியும். சொல்லியானது. அதன் பிறகு நடந்தவைகள்தான் இன்னும் அதிசயம். 

வேறு சில இடங்களையும் அலசி ஆராய்ந்துவிட்டு பின் முடிவு செய்யலாம் என்றனர் இருவரும். குளித்து முடித்து நிதயகர்ம பூஜைகளை நிறைவேற்றி அமர்ந்தபோது, இணையத்தில் அருகிலிருக்கும் சில சுற்றுலா தளங்களை பற்றி விவரம் சேகரிக்க அமர்த்தப்பட்டேன். திருமூர்த்திமலை, பொள்ளாச்சியிலிருந்து சற்று உள்ளே சென்றால் அடர் வனத்தினூடே ஒரு உயிரியல் பூங்கா உள்ளது. இந்திரா காந்தி தேசிய உயிரியல் பூங்கா அது. அடர் காடு, நிறைய மிருகங்கள், எழில் கொஞ்சும் பசுமை, ஏகாந்தமான இயற்க்கை. இவை இரண்டும் தேர்வு செய்யப்பட்டு அதில் உயிரியல் பூங்கா என தீர்மானிக்கப் பட்டது.  மதியம் நெருங்க திடிரென அவர்களுக்கே சந்தேகம் ஒருவேளை இன்று அரசு விடுமுறை என்பதால் அங்கு யாரும் இல்லை என்றால் அத்துனை தூரம் சென்றது வீனாகிவிடாதா?? உடனே உயிரியல் பூங்காவின் தொலைபேசி என்னை இணையத்தில் பெற்று முயன்றால் பதில் இல்லை. அரசு அலுவலகமாயிற்றே அதுவும் அரசு விடுமுறை நாளில். சரி என்ன செய்வது என்று முடிவு செய்ய மீண்டும் பேச திருமூர்த்தி மலை செல்லலாம் என்றனர். சரி என்றேன். இரு சகோதரிகளும் கிளம்ப சற்று நேரம் ஆயிற்று. இறுதி பத்து நிமிடத்தில் மாமா கேட்டார் அங்கு சென்றாலும் மாலை நெருங்குவதால் சரியாக வராது என்றார். என்ன செய்வது. எல்லோரும் கிளம்பியானது. சரி காரில் ஏறுங்கள் எங்காவது செல்வோம் என்று கிளம்பி நேராக பல்லடம் உடுமலைபேட்டை சாலையில் உள்ள சித்தம்பலம் என்னும் இடத்தில் அமைத்துள்ள நவகிரக கோட்டைக்கு சென்றோம். அது ஒரு தியான மண்டபம். எல்லா ராசிகளும், நட்சத்திரங்களும் வட்ட வடிவில் வீற்றிருக்க மிக பிரம்மாண்டமான லிங்க ரூபம் மத்தியில் அமைந்திருக்கும். ரம்மியமானதொரு இடம். அமைதியான சூழலில் அமைந்த அற்புதமான தியான மண்டபம்.


அதற்க்கு முன் வீட்டிலிருந்து கிளம்பும் முன்பே தந்தை கூறியது ஒரு வேலை நீங்கள் சிவன்மலை சென்றால், அங்கிருந்து சென்னிமலை செல்வது எளிதாக இருந்தால் சென்று வாருங்கள் என்று. தியான மண்டபத்தில் ஒரு சில மணித்துளிகள் அந்த ஆதியோடு ஐக்கியமாகி அந்த இடத்தின் தெய்வீக தாக்கத்தில் கலந்திருந்துவிட்டு, பல்லடம் வந்து என்னை தவிர்த்து மற்றவர்கள் மதிய உணவு முடித்தார்கள். அங்கிருந்து காங்கேயம் செல்லலாம், இப்போது மணி 3 கிளம்பினால் மாலை நடை திறப்புக்கு செல்ல சரியாய் இருக்கும் என முடிவெடுத்தோம்.
வண்டி நேராக காங்கேயம் சாலையில் விரைந்தது. கோவிலின் அடிவாரம் நெருங்கிய போது ஒரு எண்ணம், படியில் செல்லலாம் என்று. மற்ற அனைவரையும் காரிலேயே மேலே வர சொல்லி நானும் என் சகோதரியும் மகன் மட்டும் படி வழி ஏறினோம். எனக்கு படியில் செல்லவேண்டும் என்று தோன்றியதன் காரணம். மன ஒருநிலைப்படுத்த, தியானம் கிட்ட. ஆம் மலையில் கோவில் அமைத்ததற்கு இன்னொரு காரணம் இதுவாகக் கூட இருக்க்கலாம். பொதுவாக நாம் தியானத்தில் அமரும் பொழுது மனது அங்கு இங்கென்று அலை பாயும். ஆரம்ப காலங்களில். அப்பொழுது அதை இழுத்து கட்ட நாம் உபயோகிப்பது எதுவென்று நாம் அறிந்ததே. மூச்சு. அதை சற்று அழுத்தமாக உள்ளிழுத்து வெளியேற்றினால் சிதறிய எண்ணங்கள் புருவ மத்தியில் வந்து சேரும். இது மலை ஏறும் பொழுதில் இயல்பாய் அமையும். மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றி மலையேறும் சமயங்களில் அங்கு ஒரு தியானம் நிகழத் துவங்குகிறது. எண்ணங்கள் குவியத் தொடங்குகிறது. பௌர்ணமி விரதம், மாலையில் அம்மையப்பனை காண கோவில் செல்வது வழக்கம், அதற்க்கு முன்பு சிறிது நேரம் தியானம் செய்ய முடிந்தால் மிக்க மகிழ்ச்சி. வாய்ப்பு கிடைத்தது. படி வழி சென்றேன். மேலே சென்று சுற்றி வரும் வழியில் அம்மையப்பனை தரிசித்தேன் மெய் சிலிர்த்தேன். உள்ளே பிரகாரம் சென்று நாங்கள் பூஜை பொருட்களை தந்த அர்ச்சகர் வர  காத்திருந்தோம். எங்கு சென்றாரோ சற்று நேரமானது அவர் வர. தீப தரிசனம் முடிந்த நேரம், அங்கு அபிசேக பூஜைக்கு தயாராவதாய் தோன்றியதால் தாமதித்தோம். ஆம் சிறப்பானதொரு அபிசேக பூஜை  தரிசனம் தந்தார் சிவன்மலை அழகன் முருகன். வெளியே வந்து காரின் அருகில் வந்த பொது எங்களுக்கு பின் மயில் வாகனன் தரினம் தந்தார். முருகன் கோவிலில் மயிலின் தரிசனம் அற்புதமானது. எல்லோருக்கும் கிடைக்கபெறாதது. திருப்பம் வரை வந்த பொழுது முழு நிலவின் தரிசனம். என்னை பொறுத்தவரையில் அது அம்மையப்பனின் தரிசனம். அம்மாவின் அற்புத ரூபம். நான் விரதம் துடங்கி இன்றுவரை ஒரு பௌர்ணமி நாளிலும் சில வினாடிகளேனும் தரிசனம் கிட்டாது இருந்ததில்லை. மேகங்கள் சூழ்ந்து, மலை பெய்துகொண்டிருக்கும் நாட்களிலும் கூட அவர்கள் எனக்கு தரிசனம் தராது இருந்ததில்லை. 


இம்முறை சிவன்மலை உச்சியில் நின்று சிவசக்தி தரிசனம் காண்கிறேன். அத்துனை மகிழ்ச்சி. ஆழ்ந்ததொரு அமைதி சொல்லாமல் வந்து தொற்றிக்கொண்டது. அகமகிழ்தேன். என் இடையிழந்தேன். அவ்வளவு தளர்வாய் உணர்ந்தேன் நான். பூரண தரிசனம் கிடைக்கப்பெற்றேன் எனலாம். சட்டென தந்தை கூறிய சென்னிமலை நியாபகம் வர அருகில் நின்றிருந்த வாடகை கார் ஓட்டுனர் ஒருவரிடம் இங்கிருந்து சென்னிமலை செல்ல வழி இருக்கிறதா, எத்தனை தூரம், நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்ற விவரங்களைக் கூறி கேட்டேன். அவர் இங்கிருந்து செல்வது எளிதுதான் திரும்ப உங்கள் தளத்திற்கு செல்ல வேறு பாதை உள்ளது என தெளிவாய் கூற. எங்கள் பயணம் சென்னிமலை நோக்கி திரும்பியது. மாலை வெகு நேரம் ஆகிவிட்டதாலும் சிவன்மலையை விட சற்றே உயரமான செங்குத்தான மலை என்பதாலும் இம்முறை காரிலேயே மேலே சென்றேன். எத்துனை அற்புதமான தரிசனம் அது. அதிக கூட்டம் இல்லை. அழகன் முருகன் என்பதற்கு சாட்சியாய் இயல்பான அழகுடைய முருகன் சிரிப்பால் வரவேற்றார். இங்கும் அதே அனுபவம். தரிசனம் முடிந்து வெளியே வந்த பொழுது எங்களுக்கு எதிர்புறம் ஒரு சிறு கூட்டம் அபிசேக பொருட்களுடன் சென்றனர். விசாரித்தபோது, பௌர்ணமி பூஜை என அறிந்து திரும்ப உள்ளே சென்றோம். எத்தனை அலாதியான அனுபவம் அது. அங்கு அழகன் முருகனுக்கு அபிசேகம் நடக்க, ஒரு சிறு கூட்டமே அழகான தமிழில் இனிமையான ராகத்தில் ஒரு சேர கந்த ஷஷ்டி கவசமும், கந்தகுரு கவசமும் பாட, இந்த அன்பு கலந்த பூஜையில் கலந்துகொள்ள என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும் என் எண்ணிக்கொண்டேன். அங்கும் அபிசேகம் முடிந்து கிளம்பி வீட்டிற்கு வர இரவாகி விட்டது. அன்று காலை முதல் நடந்த விசயங்களையும் அனுபவங்களையும் பார்க்கும் பொழுது, என்ன நினைப்பது. எல்லாம் அவன் செயல். ஒவ்வொரு தருணத்திலும் எல்லாம் வல்ல இறைவன் நாம் என்ன செய்ய வேண்டும், எங்கு இருக்க வேண்டும், எது நமக்கு கிடைக்கப் பெற வேண்டும் என நிச்சயத்து வைத்திருப்பது தெளிவாய் புரிகிறது.
வாழ்வது மட்டுமே நமது கடமை. வாழ்விப்பது அவன் செயல். எண்ணங்கள் மிக மிக முக்கியமானவை. எதை எடுப்பது எதை விடுவது என்பது அதனினும் முக்கியம். அதை எப்படி அறிவது என்றால். புலன்களை திறந்து வைக்க பழக வேண்டும். தியானத்தில் புலன்களை முடிவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மற்ற நேரத்தில் புலன்களை திறந்திருப்பது. உள்ளும் புறமும் விழிப்புடன் இருக்கும் பொழுது நாம் ஒவ்வொன்றையும் தெளிவாய் புரிந்துகொள்ள முடியும். இது எனது அனுபவம் மட்டுமே. உங்கள் அனுபவம்கள் முற்றிலும் வேறுபட்டவைகளாக இருக்கலாம். 


எதுவாயினும் ஒன்று நிச்சயம். எல்லாம் அவன் செயல். நம் சனாதான தர்மமும், இந்து மதமும் எத்தனை எத்தனையோ ரகசியங்களை தன்னுள் புதைத்து வைத்துள்ளது. எதாவது ஒன்றிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். கடவுளை நம்புகிறீர்களோ, இல்லையோ அதை முழுமையாக செய்யுங்கள். அதைத்தான் சனாதான தர்மம் தெளிவாய் உரைக்கிறது. உங்கள் நம்பிக்கை எத்தனை உறுதியானதோ அத்தனை அனுபவங்களை அது உங்களுக்கு வாரி வழங்கும். இங்கு நாம் வெறும் கருவிகள் என்பதை தெளிவாய் உணர்த்தும். ஒவ்வொரு கணமும் வாழ வேண்டியவை. எச்செயலும், எப்பொருளும், எந்த சூழ்நிலையும் இங்கு காரணமின்றி நிகழ்வதில்லை. 

சம்போ மகாதேவா!!! 

எல்லாம் நிறைவாகட்டும். சுயம் காண விழிப்படைவோம்.

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

எண்ணம், செயல் மற்றும் அதன் விளைவு இதில் எது நமது?? பாகம் - 1

நமக்கெல்லாம் ஒரே எண்ணம் தான், இங்கு நடப்பவை அனைத்தும் நமது விருப்பங்கள், நான் தான் எனது வாழ்வை தீர்மானிக்கிறேன், நான் இதை செய்தேன் அதை செய்தேன் என்று கொக்கரித்து கொள்வதிலேயே வாழ்க்கை முழுமையுற்றதாய் நம்பிவிடுகிறோம். எல்லாம் கடந்து சிந்திக்கையில் எது நமது, எண்ணமா? செயலா? அல்லது அதன் விளைவா?? எது நம்மை சார்ந்துள்ளது. எதை நாம் செய்துவிட்டோம். சற்றே நம்மிலிருந்து விலகி நின்று நடப்பவற்றின் சாட்சியாக நின்று பார்க்கும் பக்குவம் எத்துனை பேருக்கு கிடைத்திருக்கும். அல்லது ஒரு விஷயம் நிகழ்ந்தேறிய பின் அது நடக்க அல்லது நடத்த நம்மால் நினைத்த நேரத்தில் இருந்து அதனுடனான தொடர்பியல் ஆயத்த செயல்களைக் குறித்து சிந்தித்து அது எவ்வாறு நடந்தது என்று சீர் தூக்கி பார்க்கும் பொறுமை எத்தனை பேருக்கு வாய்த்திருக்கும். இது இரண்டில் ஒன்று கிடைக்கப் பெறினும் பெரும் பாக்கியம் செய்தவர்களாவோம்.

ஆம் இன்றைய அவசர கதி வாழ்வில் யாருக்கும் எதற்கும் நேரம் என்பது கிடையாது. எதிலும் முழுமையாகவும் ஈடுபாடு கிடையாது. ஏதோ எல்லோரும் செய்வதை செய்துகொண்டு சென்று கொண்டிருக்கிறோம். ஊரோடு ஒத்து வாழ்வதாய் வாழ்வோடு ஒவ்வாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.



எனக்கு இவ்வாய்ப்புகளைபற்றிய படிப்பினைகளைக் கொடுத்த என் குருமார்களுக்குமுதல் நன்றிகளைக் கூறி இந்த பொங்கலுக்கான எனது அனுபவத்தை பகிர்கிறேன். எல்லாம் அவன் எங்கும் அவன் உள்ளும் புறமும், சொல்லும் செயலும், என் எங்கும் அவன் செய்ததே, செய்வதே. அதை மாற்ற நாம் யார்.






வழக்கமாக பொங்கல் அன்று காலை முதல் வேலையாக அப்பனின்சன்னதி சென்று தரிசித்து, பின் அதற்க்கு நேர் எதிரில் அமைந்திருக்கும் அங்காளம்மன் திருக்கோவில்(திருப்பணி நடப்பதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இரவும் பகலும் வேலை அற்ற வேளைகளிலெல்லாம் அங்குதான்)  செல்வது வழக்கம். இம்முறை சிறியதொரு மாற்றம் அப்பனை காண செல்லவில்லை. அம்மாவின் தரிசணம் முடித்து நேரே வீட்டிற்கு வந்து, உடனடியாக என் நெருங்கிய நண்பன் வீட்டிற்கு சென்றாக வேண்டிய சூழல்.

வந்தவுடன் கிளம்பியானது. இருவழிகளில் செல்ல வாய்ப்புள்ளது, ஒன்று தேசிய நெடுஞ்சாலை மற்றொன்று புறவழிச் சாலை. எது சுலபம் என்று சிந்தித்தவாறே சென்று கொண்டிருக்கையில் புறவழிச் சாலைக்கு சில மீட்டர் தூரம் முன்பு எனக்கு இடதுபுறம் சாலையின் ஓரம் நின்றிருந்த ஒரு வாகனத்தில் இடதுபுறம் திரும்பும் குறிப்பு விளக்கு எரிந்தது. எனது குரு ஒருவர் சகுண சித்தி பற்றி என்னிடம் கூறி உள்ளார். பல நேரங்களில் நம்மை சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளும் உயிரும் நமது செயல்களுக்கான சரியான முடிவினை சகுனங்களாக கூறிக்கொண்டே இருக்கும், அதை உணர்ந்துகொள்ள தனி கவனம் தேவை. எப்பொழுதும் என்ன செய்துகொண்டு இருந்தாலும் நமது சுற்றம் மீதான கவனமும் அவசியம். இது எனக்கு தரப்பட்ட படிப்பினைகளில் ஒன்று. நின்றுகொண்டிருந்த ஒரு வாகனத்தில் சட்டென குறிப்பு விளக்கு எறிந்தவுடன் முடிவானது எனது பாதை. இடது புறம் புறவழிச் சாலை வழி திரும்பியானது.

நேரே நண்பனின் வீட்டிற்கு செல்வதாய்  முடிவு. திரும்பி சில நிமிடங்கள் ஆயிருக்கும். எப்படி நான் செல்ல வேண்டிய பாதை தாண்டி அத்தனை தூரம் வந்தேன், அதும் முதல் திருப்பத்தில் திரும்ப வேண்டிய நான் அதிலிருந்து மூன்று மைல் தூரம் கடந்து மூன்றாவது திருப்பத்தை எப்படி நெருங்கினேன் இடையில் என்ன நேர்ந்தது. வேறு யாரவது உடனிருப்பின் பேசிக்கொண்டே மறந்து சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது, தனியே செல்லும்போது பாதை தவிர்த்து எனது கவனம் மாறியதில்லை. என்ன நேர்ந்தது இம்முறை. அவ்வழி எனக்கு புதியதும் அல்ல, பல ஆண்டுகளாக பலமுறை பயணித்த வழி அது. சட்டென சுதாரித்த போது  நான் நெருங்கிக் கொண்டிருந்தது அருள்மிகு தேனீஸ்வரர் ஆலயம் செல்லும் திருப்பம். ஊரின் துவக்கத் திருப்பம் செல்ல வேண்டியவன் அதே ஊரின் இறுதி திருப்பம் சென்றடைந்தேன். சட்டென உள்ளே உரைக்க நேரே அதிலேயே திருப்பி விட்டேன். சமயம் உச்சி வேளை 12.30 வழக்கமாக நடை சாத்தும் நேரம். ஊருக்குள் புகுந்து 2 மைல் செல்ல வேண்டும். மித வேகத்தில் இருந்து சற்றே வேகத்தை கூட்டி எப்படியேனும் அப்பனை தரிசித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் பறந்தேன். வழியை அடைத்து மேடையிட்டு பொங்கல் விழா நடத்திக் கொண்டிருந்தனர்.

வேறு வழியும் எனக்கு தெரியாது. அங்கு இருந்த பெரியவரிடம் வழி கேட்கையில் ஒரு கார் எனைக்கடந்து அருகிருந்த குறுக்கு சந்தில் சென்றது. அதன் பின்னே செல்ல சொன்னார் அந்த பெரியவர். மிக குறுகிய சாலை என்பதால் கார் ஆடி அசைந்து மெதுவாகவே சென்று கோவிலுக்கு செல்லும் பாதைக்கு சற்று முன்பாக பிரதான சாலையை அடைந்தது. அங்கிருந்து கோவிலை நெருங்கும் நேரத்தில் பிரதான ராஜகோபுர வாயிலின் ஒரு கதவு மூடப் பட்டிருந்தது. இது கோவிலின் நடை அடைப்பதற்கான அடையாளம். வெளியிலிருந்து வருபவர்கள் தூரத்திலே கண்டு கொள்ளலாம் மூலவர் சன்னதி அடைக்கப் படுகிறது என்று.

வாகனத்தை நிறுத்திவிட்டு வேகமாக ஓடினேன். உள் நுழையும் வரைதான் அவசரகதி எல்லாம், அது என்னவோ கோயிலுக்குள் சென்றுவிட்டால் மனம் சற்றும் சலனப்படுவதில்லை. நேரே சென்று விநாயகரை வழிபாட்டு, தட்சிணாமூர்த்தியைக் கண்டு, லிங்கோத்பவர் முடித்தால் அவரின் எதிரில் பஞ்ச லிங்கேஸ்வரர் அமர்ந்திருப்பார். பிரம்மாண்ட வெண்ணிற லிங்கம். எப்போது சென்றாலும் அருகிலுள்ள வில்வ மரத்தில் சில இலைகளை பறித்து ஆத்மார்த்தமாக தியானித்து அர்ச்சிப்பது பழகிப்போன விஷயம் என்பதால். அதையும் தவிர்க்க முடியவில்லை. மெல்ல சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், துர்க்கை என எல்லாம் கடந்து நந்தி தொழுதெழுந்து சன்னதி நெருங்கும் பொது பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. சன்னதி நுழைகையில் வேறு யாரும் இல்லை அங்கு. அர்ச்சகர் புன்முறுவலோடு வரவேற்றார். சன்னதியில் நின்று தேனீஸ்வரரை கண்ட நிமிடம் என்னுள் ஏதோ அதீத மாற்றம். மிக மிக மென்மையாக உணர்ந்தேன். உள்ளிருந்து எதோ ஒன்று பொங்கி தொண்டைவரை வந்து நின்றது. மென்மையான விம்மல். சிவபுராணத்தின் சில வரிகளைப் பாடி, எல்லாமாகிப்போன ஈசனைப் போற்றி நிற்கையில் மூலாதாரம் தொடங்கி மேல்நோக்கிய ஒரு நெருடல். உச்சியில் சகஸ்ரகாரத்தில் ஒரு மெல்லிய உணர்வு.

தியான நேரத்தில் கிடைக்கும் ஒரு பேரின்பம். அங்கு சன்னதியில் பெற்றேன் நான். அப்பனைக் கண்குளிரக் கண்டு, அருகில் அம்மனின் சன்னதியில் வஜ்ராசனம் இட்டு சில நிமிடம் தியானித்து வெளியில் கிளம்ப அம்மன் சன்னதி அடைக்கப் பட்டது. அப்பனின் சன்னதி வழியாக வெளியே வந்து மற்ற சுற்று தெய்வங்கள் தொழுது கோவிலை விட்டு வெளியே வந்தவுடன் நடை அடைக்கப் பட்டது. இதற்க்கு எல்லாம் என்ன காரணம். எப்பொழுதும் நடை அடைக்கும் நேரம் அவசர தொனியில் இருக்கும் அர்ச்சகர் அத்துனை பொறுமை காத்தது ஏன்.? என்னை அங்கு கொண்டு நிறுத்தியது யார். நிச்சயமாய் நான் அங்கு செல்லும் எண்ணம் கொண்டிருக்கவில்லை.

ஏதோ ஒரு சக்தி எல்லாம் நிகழ்த்துகிறது. நிகழ்வுகளின் கருவியை இருக்கிறோம் நாம் என்ற எண்ணம் இன்னும் இன்னும் அழுத்தமாக மூளையின் எல்லா செல்களிலும் பதிக்கிறது அந்த சக்தி. அதை நான் அழைக்க விரும்பும் நாமம் சிவம். சர்வம் சிவமயம். அவனின்றி ஓரணுவும் அசையாது.

அனுபவங்கள் பல பாடங்களை கற்றுகொடுக்கிறது. பாடங்கள் நமது தேவைக்கும் தேடலுக்கும் தொடர்புடையதாய் அமைகிறது. தேவை என்பது நமது விருப்பம் அன்று, நமக்கு இவ்வாழ்க்கை வழங்கப் பட்டதர்க்கான நோக்கம் நிறைவேற என்ன தேவையோ அதுதான் வாய்க்கும். மற்றவை மணல் வீடுகள்தான்.

பொங்கலன்று மகர ஜோதியும் கூட கார்த்திகை முதல் தேதியில் தொடங்கிய என் விரதம் அன்று முடிவு. அப்பனும் அய்யனும் பேரருள் கொண்டு என்னை அணைப்பதை உணர்ந்தேன்.

தை இரண்டு - மாட்டு பொங்கல். பௌர்ணமி. அன்றும் எனதனுபவம் மிக அருமையானது. அடுத்த பதிவில்.